பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!!1551434949


பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!!


செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பள்ளிகள் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில்,  தனியார் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 220-க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்று அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களை, சப்-கலெக்டர் சஞ்சீவனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பதை குறித்து கேட்டறிந்தனர்.

பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா? வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளதா? அவசரகால வழி உள்ளதா? முதலுதவி சிகிச்சை பெட்டி, முக்கியமாக ஒவ்வொரு பஸ்களிலும் கேமராக்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளானால் ஓட்டுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் மூலம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று மொத்தம் 191 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.அதில் 5 வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டது. மேலும் பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான உரிய சான்று பெற்று அதன் பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog